• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் எச்சரிக்கை: கருணாநிதி அறிவுரை

November 9, 2016 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்ற போதிலும், நாட்டிலே உள்ள பெரிய செல்வந்தர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:,

மத்திய அரசு நன்கு சிந்தனை செய்து, ஏழை எளிய நடுத்தர மக்களும், சிறு வணிகர்களும் பாதிக்கப்படாமல் தங்கள் வாழ்க்கையை எப்போதும் போல் நடத்திட உதவும் வழி வகையினைச் செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறுவதாக அறிவித்து விட்டு, இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை இது, கறுப்புப் பணமும் ஊழலும்தான் ஏழ்மைக்குக் காரணமாக உள்ளன என்றும் காரணம் கூறியிருக்கிறார்.

வரவேற்கத் தக்க அறிவிப்பு என்ற போதிலும், இந்த அறிவிப்பின் காரணமாக, நாட்டிலே உள்ள பெரிய செல்வந்தர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும், சிறு வணிகர்களும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர்களும் தங்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டை வாங்குவதற்கு யாரும் முன்வராத நெருக்கடியான நிலையில், தெருக்களிலே அலை மோதுகின்ற அவலத்தைத்தான் இந்த அறிவிப்பின் காரணமாகக் காண முடிகிறது.

இன்றைய காலகட்டத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாத ஊதியம் பெறுபவர்களிடம் மட்டுமின்றி நாள் ஊதியம் பெறும் ஏழை எளிய மக்களிடமும் புழக்கத்தில் உள்ளது என்பதை மறுக்க இயலாது.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காலையில் எழுந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்குப் பால் வாங்குவதற்குக் கூட வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கறுப்புப் பணம் இன்று யாரிடம் உள்ளது? நான் கூறிய அந்த ஏழை எளிய, உழைத்துப் பிழைக்கும் பிரிவினரிடமும், நடுத்தரக் குடும்பத்தினரிடமும் இருக்கிறதா என்றால் கிடையாது.
வங்கிகளிலே கோடிக்கணக்கில், லட்சக் கணக்கில் பணம் வைத்திருப்போர் சேர்த்து வைத்த கறுப்புப் பணத்தில் பெரும் பகுதியை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று பல்வேறு வடிவங்களில் பாதுகாப்பாக வைத்திருப்பது போக, தங்களிடம் எஞ்சி உள்ள சில கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வைத்திருப்போர் எண்ணிக்கை நாள் தோறும் பெருகி வருகிறது.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை எனச் சொல்லப்படுவதால் வரவேற்கலாம். எனினும், பெரிய பணக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்வதை விட, சாதாரண, நடுத்தர ஏழையெளிய மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

80 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்ந்து, இந்தியக்குடிமக்கள் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைப்போம் – என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறி விட்டதை மறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அலட்சியப்படுத்தி விட முடியாது.

கறுப்புப் பணத்தை ஒழித்திடும் நோக்கில் 1978ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனதா ஆட்சிக் காலத்தின் போது 1000 ரூபாய், 5000 ரூபாய், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக எந்த அளவுக்குக் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டது என்பதையும் கருதிப் பார்த்து இப்போது மிகுந்த எச்சரிக்கையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும் படிக்க