November 23, 2018
தண்டோரா குழு
சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்த கேரள காவல்துறையை கண்டித்து கன்னியாகுமரியில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
சபரிமலைக்கு கடந்த 20-ந் தேதி இருமுடிக்கட்டுடன் காரில் சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவருடன் வந்திருந்த பாரதிய ஜனதா தொண்டர்களின் கார்களை பம்பைக்கு அனுமதிக்காததால்,அவர்கள் அரசு பஸ்சில் சபரிமலைக்கு சென்றார்.
பின்னர் சாமி தரிசனம் முடித்து திரும்பும் வழியிலும் பொன் ராதாகிருஷ்ணனுடன் சென்ற தொண்டர்களின் கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து, பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில்,மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்த கேரள காவல்துறையை கண்டித்து கன்னியாகுமரியில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதனையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் பஸ்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. முழு அடைப்பால் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.பேருந்துகள் இயக்கப்படாததால் வேலைக்கு செல்பவர்கள்,பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.பாரதிய ஜனதா கட்சியினரின் போராட்டம் காரணமாக தமிழக-கேரள எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.