September 25, 2018
தண்டோரா குழு
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்,கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலை 30ம் தேதி தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தார்.அப்போது அங்கு வந்த வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார்.பின்னர் சத்தியமங்கலம் வனப்பகுதியில் 108 நாட்கள் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த அவர் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு அதே ஆண்டு நவம்பர் 15-ம் தேதி,வீரப்பன் ராஜ்குமாரை விடுவித்தார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக வீரப்பன்,சேத்துக்குளி கோவிந்தன்,சந்தனகவுடாமல்லு உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.இதற்கிடையில்,2004-ம் ஆண்டு சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார்.மேலும்,இந்த வழக்கு விசாரணையில் இருந்த போதே,இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவரான சேத்துக்க்குளி கோவிந்தன் மற்றும் ரங்கசாமி இறந்துவிட்டனர்.அதற்கு அடுத்து 2 ஆண்டுகளில் ராஜ்குமாரும் இறந்துவிட்டார்.
இந்நிலையில் 18 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து ஈரோடு, கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் கோவிந்தராஜ்,அந்தில்,பசுவண்ணா,குப்புசுவாமி மற்றும் கல்மாடி ராமன் ஆகிய 5 பேரும் நேரில் ஆஜராகினர்.அப்போது நீதிபதி மணி இவ்வழக்கில் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும்,குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த தீர்ப்பில் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனவும்,வீரப்பனுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தொடர்பு நிரூபிக்கப்படவில்லை எனவும்,குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்படாததாலும் அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி உத்திரவிட்டார்.