November 16, 2018 தண்டோரா குழு
கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,புயலாக மாறியது கஜா புயல்.இந்த கஜா புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்ததாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,இந்த கஜா புயல் நாகை,தஞ்சை,புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கஜா புயல் காரணமாக 3 மாவட்டங்களில் சுமார் 12,000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில் 5,000க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 83,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிச்சாமி,
“கஜா புயலால் தமிழகத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 83,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்கப்பட்டுள்ளது.சேதம் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.கஜா புயலால் நாகையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.மின் விநியோகம் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருக்கிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமதிப்பு குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது.சேதமதிப்பு குறித்து ஆய்வு செய்து,அறிக்கை பெற்ற பின் மத்திய அரசிடம் நிதி கோரப்படும்.கஜா புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.புயல் பாதித்த பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.புயலால் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளேன்”.இவ்வாறு அவர் கூறினார்.