November 22, 2018
தண்டோரா குழு
கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை மாலை தமிழகம் வருகிறது.‘கஜா’ புயல் தமிழகத்தை தாக்கியதில்,நாகப்பட்டினம்,திருவாரூர், தஞ்சாவூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,கடலூர்,திண்டுக்கல்,சிவகங்கை,கரூர்,திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடிசை வீடுகளும்,ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்தன.சுமார் 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்கள் சேதமடைந்தன.குறிப்பாக, நெல்,தென்னை,வாழை அதிக அளவில் அழிந்து போய் உள்ளன.புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
புதுக்கோட்டை,தஞ்சை மாவட்டங்களை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி,இன்று(நவ.,22) டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து புயல் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.மேலும்,பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதன்படி சேதப் பகுதிகளைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க மத்தியக் குழு வெள்ளிக்கிழமை தமிழகம் வருகிறது.சென்னை வரும் இந்தக் குழு முதல்கட்டமாக முதல்வரைச் சந்தித்த பின் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை,தஞ்சை,திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களைப் பார்வையிட உள்ளது.அவர்களுடன் தமிழக அதிகாரிகளும் செல்வர்.பார்வையிட்ட பின் இதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் இந்தக் குழு அளிக்கும்.குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் குறித்த தகவல் தற்போது அறிவிக்கப்படவில்லை.