November 27, 2018
தண்டோரா குழு
கஜா புயல் நிவாரணமாக அதிமுக சார்பில் ரூ.1 கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அளித்தார்.
‘கஜா’ புயல்தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.புயலால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.உயிர் சேதமும்,பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.இதையடுத்து,தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் முதல்கட்டமாக ரூ. 1500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து,கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி,தனியார்,அரசு சாரா நிறுவனங்கள் தனி நபர்கள்,திரைப் பிரபலங்கள் என பலரும் புயயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.அந்த வகையில் திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.இதுமட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து அக்கட்சி சார்பில் நிவாரணம் வழங்கபட்டு வருகிறது.
இந்நிலையில்,கஜா புயல் நிவாரணமாக அதிமுக சார்பில் ரூ.1 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.இதற்கான காசோலையை முதல்வர் பழனிச்சாமியிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று வழங்கினார்.