September 26, 2018
தண்டோரா குழு
ஹைதராபாத்தில் சைப்ரபாத் பகுதியில் முன்பகை காரணமாக முக்கிய சாலை நடுவினில் பொதுமக்கள் எதிரில் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கான மாநில தலைநகர் ஹைதராபாத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் முக்கிய சாலையில் இன்று காலை முன்பகை காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இதில் கொலை செய்யபட்டவர் பெயர் ரமேஷ் என்றும்,இவர் மீது ஏற்கனவே மகேஷ் குட் என்பவர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு இருக்கிறார்.இதற்காக இன்று நீதிமன்றம் சென்று வரும் வழியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் நிகழும் போது அந்த இடத்தில் போலிஸாரும் இருந்துள்ளனர்.சுற்றிலும் பொது மக்கள் இருந்தபோதும் அடையாளம் தெரியாத நான்கு பேர் இந்த சம்பவத்தை செய்துள்ளனர்.ஒருவர் கொடாரியை கொண்டு ரமேஷ் என்பவரை அடிக்கும்போது,அதை தடுக்க வந்த பொதுமக்களை விரட்டுவதற்காக கட்டையை வைத்து மீதம் இருந்த மூன்று பேர் துரத்தியுள்ளனர்.இந்தக் காட்சி அங்கு இருந்து சிசிடிவியில் பதிவாகியுள்ளது.தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
ரமேஷ் சம்மந்தப்பட்டிருக்கும் கொலை வழக்கில் கொலை செய்யப்பட்ட மகேஷ் என்பவரின் உறவினர்கள் தான் இச்செயலை செய்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.பின்னர்,இந்த கொலையை செய்துவிட்டு அவர்கள் நான்குபேரும் பைக்கில் தப்பித்துவிட்டனர்.இதையடுத்து,இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.