September 5, 2018
தண்டோரா குழு
குட்கா முறைகேடு புகார் தொடர்பாக நடைபெறும் சிபிஐ சோதனையால் தமிழகத்திற்கே தலைகுனிவு என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர்,முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீடு,விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளர்,முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.மொத்தம் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில்,குட்கா முறைகேடு புகார் தொடர்பாக நடைபெறும் சிபிஐ சோதனையால் தமிழகத்திற்கே தலைகுனிவு என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,முன்னாள் சென்னை மாநகரஆணையர் ஜார்ஜ்,தமிழக காவல்துறை டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட குட்கா ஊழல் டைரியில் இடம் பெற்றுள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் இல்லங்களிலும்,சி.பி.ஐ ரெய்டு நடத்தியிருப்பதை வரவேற்கிறேன்.
குட்கா ஊழலை மறைக்க,அதிமுகவின் மூன்று முதலமைச்சர்களும்,இரு தலைமைச் செயலாளர்களும்,லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகளும் எவ்வளவோ முயன்றும்,இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் இன்றைக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டு,இப்போது அதிரடியாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டுகள் நடைபெற்றுள்ளன என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
தேதி வாரியாக குட்கா குடோன் அதிபரிடமிருந்து மாமூல் பெற்ற போலீஸ் அதிகாரிகளையும்,அமைச்சர் திரு.விஜயபாஸ்கரையும் காப்பாற்றுவதற்காக,வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் பற்றி விசாரிக்க நினைத்த டி.ஜி.பி. திரு.அசோக்குமாரை இரவோடு இரவாக பதவிவிலக வைத்து,ஆட்சியினர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார்கள்.
அந்த கடிதத்தை காணாமல் அடித்த தலைமைச் செயலாளர் திரு ராம்மோகன்ராவை,வெட்கம் ஏதுமின்றிக் காப்பாற்றினார்கள்.பிறகு அந்த வருமான வரிக் கடிதம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று,தலைமைச்செயலாளார் கிரிஜா வைத்தியநாதன் அவர்களே உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் அவலம் அரங்கேறியது.
அதையும் மீறி,மதுரை உயர்நீதிமன்றக் கிளை “குட்கா விசாரணைக்கு”உத்தரவிட்டு,சுதந்திரமான விஜிலென்ஸ் கமிஷனரை நியமிக்க வேண்டும்”என்று உத்தரவிட்டது.விசாரணை,அமைச்சரையும்,டி.ஜி.பி.க்களையும் நெருங்கி விடுமோ என்று கருதி,விஜிலென்ஸ்ஆணையராக நியமிக்கப்பட்ட வி.கே.ஜெயக்கொடி அவர்களையும் அவர் நேர்மையானவர் என்பதால் மாற்றினார்கள்.
வருமான வரித்துறை கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர்,டி.ஜி.பி.க்கள் ஆகியோரைக் காப்பாற்றுவதற்காக,குட்கா ஊழல் டைரியில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சென்னை மாநகர காவல் ஆணையரான ஜார்ஜ் மூலமாகவே கீழ்நிலை காவல்துறை அதிகாரிகளை மட்டும் குட்கா ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டி ஒரு கடிதம் எழுதவைத்தார்கள்.
வருமான வரித்துறை கடிதத்தை காணாமல் அடித்து விட்டு,ஆணையராக இருந்த ஜார்ஜின் கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த லஞ்ச ஊழல் தடுப்புத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,டி.ஜி.பிக்கள் ஆகியோரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் உள்நோக்கத்துடன்,சேர்க்கவில்லை.
பிறகு நடைபெற்ற விசாரணையில் டி.ஜி.பி.க்கள் மற்றும் அமைச்சர் பெயரை சேர்க்க வேண்டும் என்ற நெருக்கடி உருவான போது,லஞ்ச ஊழல் தடுப்புத்துறை இயக்குனராக இருந்த மஞ்சுநாதா என்ற கூடுதல் டி.ஜி.பி.யை அங்கிருந்து தூக்கியடித்தார்கள்.
குட்கா ஊழல்வழக்கை திசை திருப்ப,குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க,தற்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டார்.இந்நிலையில் திமுக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த தீர்ப்பை எதிர்த்து சுகாதாரத்துறையில் உள்ள ஒரு கடை நிலை ஊழியரை வைத்து,உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து,தடுப்பதற்கு முதலமைச்சர் துணைபோனார்.ஆனால் அந்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்ததால்,இப்போது சி.பி.ஐ., குட்காவழக்கில் குட்கா குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்டவர்களை விசாரித்துள்ளது.
அதில் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் ,காவல்துறை அதிகாரிகள் மீதும்,சுகாதாரத்துறை அமைச்சர் மீதும் ரெய்டு நடத்தியிருக்கிறது.ஆகவே குட்கா அதிபரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலும்,ஆரம்பகட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் இந்த சி.பி.ஐ. ரெய்டு நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,அப்போது சென்னை மாநகர ஆணையராக இருந்த ஜார்ஜ்,இப்போது டி.ஜி.பி.யாக இருக்கும் டி.கே. ராஜேந்திரன் ஆகியோரின் மீது குட்கா டைரி,குட்கா குடோன் அதிபர் வாக்குமூலம் மற்றும் தற்போதையை சி.பி.ஐ. ரெய்டு மூலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஊழலுக்கான ஆரம்பகட்ட ஆதாரம் வெளிவந்துள்ளது.
குட்கா ஊழல் புரிந்ததற்காக ரெய்டு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சரவையிலும்,டி.கே. ராஜேந்திரன் புகழ்மிக்க தமிழக காவல்துறையின் தலைவராகவும் இனியும் நீடிப்பதும் ஒருநிமிடம் நீடித்தாலும் அது மக்களாட்சித் தத்துவத்திற்கும்,நேர்மை – நியாயத்திற்கும்,காவல்துறைநிர்வாகத்திற்கும் மிகப்பெரிய இழுக்காகவும்,துடைக்க முடியாத கறையாகவும் அமைந்து விடும்.ஆகவே சுகாதாரத்துறை அமைச்சரும்,டி.ஜி.பி.யும் தங்கள் பதவிகளை அவர்களாகவே முன்வந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
அப்படி ராஜினாமா செய்யவில்லையென்றால் தமிழக ஆளுநர் அமைச்சர் விஜயபாஸ்கரையும்,தமிழ்நாடு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனையும் எவ்வித காலதாமதமும் இன்றி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன்.இந்த நிகழ்வு தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது.அரசியல் சட்டஅமைப்புகள் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு வாளாவிருந்தால்,சம்பந்தப் பட்டவர்களை சரித்திரம் மன்னிக்காது” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.