November 29, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர்,அமைச்சர்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள்,அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா கொண்டுவரும் வகையில் லோக்பால் சட்டம் ஏற்கனவே மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது.இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலையில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது,லோக் ஆயுக்தா குறித்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில்,தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியதற்கான அறிவிப்பை தமிழக அரசு அரசிதழை வெளியிட்டது.லோக் ஆயுக்தா செயலாளர்,இயக்குனர்,சார்பு செயலாளர்,பதிவாளர்,சார் பதிவாளர்,ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் என 26 பணியிடங்களை உறுதி செய்து அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.மேலும்,லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் இந்த 26 பணியிடங்களுக்கான தகுதிவாய்ந்த நபர்களையும் தேர்வு செய்வார் என தெரியவந்துள்ளது.நாட்டில் 18-வது மாநிலமாக தமிழக அரசும் லோக் ஆயுக்தாவை தொடங்குவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.