• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தையைக் காப்பாற்றிய நாய்கள்

November 8, 2016 தண்டோரா குழு

நாய்கள் எப்பொழுதும் நன்றியும், விசுவாசமும் கொண்டவை என்பதை இந்த நெஞ்சை தொடும் சம்பவத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை மனிதாபிமானம் மனிதர்களை விட, நாய்களிடத்தில் அதிகம் இருப்பதாகத் தோன்றுகிறது.

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள புருலியா நகரின் பதார்டி பாரா பகுதியில் உல்லாஸ் சவுத்ரி என்ற பள்ளி ஆசிரியர் வசித்து வருகிறார். அண்மையில், அவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத புதர் மண்டிக்கிடந்த பகுதியிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டார். அங்கு இருந்த புதர்களை விலக்கி பார்த்தபோது, 4 தெரு நாய்கள் எதையோ நடுவில் வைத்து, அதனைச் சுற்றி வந்துகொண்டிருந்தை கவனித்துள்ளார்.

என்னவென்று புரியாத அவர் சந்தேகத்துடன் பார்த்தார். அவர் அருகில் வருவதை உணர்ந்த நாய்கள் உற்சாகமாகி வாலை ஆடிக்கொண்டே சன்னமாக குரைத்து, தரையில் மண்டியிட்டு ஏதோ சொல்ல முயன்றன.

அருகில் சென்ற உல்லாஸ் சவுத்ரி பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒரு சிவப்பு நிறத் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்பிஞ்சுக் குழந்தையைக் காக்கைக் கூட்டம் கொத்தி விடாமல், நாய்கள் அவற்றைத் துரத்திக் கொண்டு, அக்குழந்தையைப் பாதுகாத்து வந்துள்ளன.

உடனடியாக சத்தம் போட்டு, அருகில் இருந்தவர்களை அழைத்தார் சவுத்ரி. அங்கு வந்தவர்கள் குழந்தையை சவுத்ரியின் வீட்டுக்குக் கொண்டு சென்றனர். தொடர்ந்து அழுது முகமெல்லாம் சிவந்து போயிருந்த குழந்தைக்கு, அவர் வீட்டுக்கு அருகே வசிக்கும் பர்வீன் சென் என்ற பெண் பாலூட்டியுள்ளார். அதன் பிறகு, பசி தீர்ந்த அந்த பச்சிளம் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது.

பின்னர், இதைக் குறித்து புருலியா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் குழந்தைகள் உதவி எண்ணுக்கும் தகவல் தந்துள்ளனர். அக்குழந்தையை தெபென் மஹதோ சதர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் எடை 2.8 கிலோ உள்ளது என்றும் அக்குழந்தை பிறந்து 7 முதல் 10 நாட்களாகியிருக்கும் என்று தெரிவித்தனர். சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்படும் அக்குழந்தைக்கு மஞ்சள் காமாலை அறிகுறி தென்பட்டாலும், பயப்பட ஒன்றுமில்லை என்று மருத்துவர் சிவ்சங்கர் மஹதோ கூறினார்.

கடந்த சனிக்கிழமை அன்று மீட்கப்பட்டதால், அக்குழந்தைக்கு சானியா என்று சவுத்ரி பெயர் சூட்டினார். சிகிச்சைகள் முடிந்த பிறகு, பாத்பந்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சானியா சேர்க்கப்படுவாள் என்று மாவட்ட ஆட்சியர் திபன்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தின் மூலம், தெரு நாயாக இருந்தாலும் சரி வீட்டு நாயாக இருந்தாலும் சரி, அவை மனிதர்களின் உற்ற தோழன் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த நாய்கள் இல்லையெனில், இவ்வுலகில் ஒரு குழந்தையை நாம் இழந்திருப்போம். உண்மையில், நாம் தான் நாய்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்’ என்றார் சவுத்ரி.

மேலும் படிக்க