August 7, 2018
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்கிடையில்,காவிரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே கூற முடியும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இச்செய்தியை அறிந்த திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கி வா!வா!தலைவா எழுந்து வா தலைவா என கோஷமிட்டு வருகின்றனர்.கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க நிர்வாகிகள் காவேரி மருத்துவமனையில் கூடியுள்ளனர்.
தொண்டர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவேரி மருத்துவமனை பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.காவேரி மருத்துவமனையில் 2 துணை ஆணையர்கள்,4 உதவி ஆணையர்கள் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில்,நேற்றிரவே சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில்,போக்குவரத்து மற்றும் காவல் துணை ஆணையர்களுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில் சென்னை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸார் அதிகளவு குவிக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 1200 போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.இதில்,
ஆயுதப்படை காவலர்கள் 500 பேரும்,தமிழக சிறப்பு காவல்படை வீரர்கள் 700 பேரும் இதில் உள்ளனர்.
மேலும்,சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களில் இருந்து தலா 5 காவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.