August 7, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார் என காவிரி மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.இதற்கிடையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவு 12.10 மணிக்கு கருணாநிதிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது ரத்த அழுத்தம் குறைய தொடங்கியது.இதனால்,ஆம்புலன்ஸ் மூலம் அவர் காவிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.இதற்கிடையில்,தேசிய மாநில அளவிலான அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் காவிரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால், 10வது நாளான நேற்று மாலையில் மீண்டும் கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.இதையடுத்து,திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.இதை கேள்விபட்டு ஆயிரக்கணக்கான தொண்டர்களும் மருத்துவமனை முன்பு கண்ணீருடன் குவியத் தொடங்கினர்.
இதையடுத்து இன்று மாலை 4.30 மணியளவில் காவிரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார் என காவிரி மருத்துவமனை அறிவித்துள்ளது.கருணாநிதியின் மரண செய்தியை கேட்டு மருத்துவமனை முன் காத்திருந்த திமுக தொண்டர்கள் கதறி அழுது வருகின்றனர்.