October 22, 2018
தண்டோரா குழு
வடசென்னை திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 17ம் தேதி வெளியான படம் வடசென்னை.இப்படம் வசூல் ரீதியிலும் ரசிகர்கள் மத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்தில் இடம்பெற்ற சில வசனங்களுக்காக இப்படத்திற்கு தணிக்கைகுழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி இருந்தது.
இந்நிலையில்,சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான சார்லஸ் அலெக்சாண்டர் இயக்குநர் வெற்றிமாறன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அம்மனுவில்,வடசென்னை திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தாலும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது.
சமூக அக்கறை இல்லாமல் பார்வையாளர்களின் மனதை புண்படுத்தி,காயப்படுத்தும் வகையில் இயக்குனர் வெற்றிமாறனால் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.ஆகையால் சமூகத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும்,நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான்,சமூகத்தை சீரழிக்கும் விதமான திரைப்படங்கள் இனிமேல் வெளிவராது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து,இப்புகாரைப் பெற்றுக் கொண்ட உளவுத்துறை துணை ஆணையர் விமலா,இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக சார்லஸ் அலெக்சாண்டர் செய்தியாளர்களிடம் கூறினார்.