• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இட்டார் பெரியோர். இடாதாரே இழிகுலத்தோர்.

May 9, 2016 தண்டோரா குழு

அர்ஜுனன் தனது குரு பீஷ்மரின் தாகசாந்திக்காக கங்கையை அவரது இருப்பிடத்திற்கே கொணர்ந்ததாகப் புராணக் கூற்று.

இந்த நவீன அர்ஜுனன் தனது மனைவிக்காகக் கிணற்றையே தனது இருப்பிடம் கொண்டு வந்தது இன்றைய உண்மை.

மகாராஷ்டிராவிலுள்ள வாஷிம் மாவட்டம் மிகுந்த வறட்சியுள்ள ஒரு பகுதி. அங்கு மாலேகான் தாலூக்காவில் உள்ள கோலம்பேஷ்வர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபுராவ் தாஜ்னே.

அவரது மனைவி அங்கிருக்கும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கச் சென்றபோது சில மேட்டுக்குடி மக்கள் அவரைத் தடுத்துள்ளனர்.

இதையறிந்த பாபுராவ் சமூகத்தில் புரையோடிக் கொண்டிருக்கும் தீண்டாமையை எதிர்த்துச் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் அந்த தலித் தொழிலாளி தங்களுக்கென ஒரு கிணற்றைத் தோண்ட முடிவு செய்துள்ளார்.

சொந்த பந்தங்களின் ஏளனத்தைப் பொருட்படுத்தாது, கருமமே கண்ணாயிருந்து கடுமையாக உழைத்து 40 நாட்களில் கிணற்றை வெட்டி முடித்துள்ளார்.

அது தற்போது அந்தப் பிராந்தியத்திலுள்ள அனைத்து தலித் மக்களுக்களுடைய தண்ணீர் பிரச்சனையையும் தீர்க்க உதவுகிறது.

பாபுராவ் பத்திரிக்கையாளர்களிடம் பதிலளிக்கையில் கிணற்றில் நீர் வந்தது தனது அதிர்ஷ்டமே என்றும், கடின உழைப்பின் ஊதியமே என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் அறிந்ததும் வாஷிம் மாவட்ட அதிகாரி கிரான்டி டோம்பி கிணற்றைப் பார்வையிட்டுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

தீர்மானமான அசைக்கமுடியாத முடிவெடுக்கும் மன உறுதியைப் படைத்தவர் என்று பாபுராவைப் பாராட்டிக் கௌரவித்தார்.

இந்தப் பணிக்கு நிர்வாகத்தின் தரப்பில் ஏதேனும் உதவிக் கிடைக்குமா என்ற மக்களின் கேள்விக்கு அந்த அதிகாரி, அதைப் பற்றி தற்பொழுது எதுவும் கூற இயலாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

தலித் பெண்மணிக்குக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் உரிமையை மறுத்த கிராமத்து மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை காக்கும் சட்டத்தின் கீழ் ஏதேனும் தண்டனை விதிக்கப்படுமா என்றும் மக்கள் வினவினர்.

புகாரில் குறிப்பிடப்பட்ட கிணற்றையும், மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட மக்களையும் அரசு இன்னும் இனம் காணவில்லை என்று அதற்குப் பதில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க