November 23, 2018
தண்டோரா குழு
கோவையில் பிரபல நிறுவனங்களின் பேரில் தயாரிக்கப்பட்ட 500 லிட்டர் கலப்பட எண்ணெய் மற்றும் நெய்யை கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவையை அடுத்த கே.கே.புதூர் பகுதியில் எண்ணெய் தயாரிப்பது குடோன் இயங்கி வந்து உள்ளது. இந்நிலையில் இந்த குடோனில் இன்று கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது பரிசோதனை செய்து பார்த்ததில் அங்கு தயாரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் நெய் முழுவதும் கலப்படம் என தெரிய வந்தது. கடந்த சில மாதங்களாக பிரபல நிறுவனங்கள் பெயரில் எண்ணெய் மற்றும் நெய்யை தயாரித்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அங்கு தயாரிக்கப்பட்ட 500 லிட்டர் கலப்பட எண்ணெய் மற்றும் நெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இவர்கள் பல்வேறு பகுதிகளில் கலப்பட எண்ணெய் தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது போன்ற கலப்பட எண்ணெய்யை தயார் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.