September 26, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம் அன்னூரில் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.35 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த மசக்கவுண்டன்செட்டிபாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட,குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அன்னூர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில்,பத்துக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது சாந்தகுமார் என்பவருக்கு சொந்தமான குடோனில் சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட பான்மசாலா,குட்கா,ஆகியவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவைகளை பறிமுதல் செய்த போலீசார்,அன்னூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும்,பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு 13 லட்சத்து 72 ஆயிரம் என்பதும்,2.350 கிலோ மூலப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது.இதனையடுத்து குடோன் உரிமையாளர் சாந்தகுமாரை கைது செய்த போலீஸார் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த கோவை கணபதி பகுதியைச் சார்ந்த பட்டுராஜ்,தங்க சிங்,ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கருமத்தம்பட்டியில் நேற்று 450 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த நிலையில் அன்னூரில் போலீஸார் 2350 கிலோ பறிமுதல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.