September 18, 2018
தண்டோரா குழு
கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 200 கிலோ மதிப்பிலான குட்கா,பான்மசலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து காவல்துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது குடியிருப்பை ஓட்டிய ஒரு வீட்டில் குட்கா,பான்மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கண்டுபிடித்தனர்.மளிகைக் கடை நடத்தி வரும் சுயம்புராஜ் வீடு எனக்கூறி குடோனில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் சுயம்புராஜிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதுகுறித்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கூறுகையில்,சுமார் 200 கிலோ எடையுடைய குட்கா,பான்மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதன் மதிப்பு சுமார் 1.75 லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்தனர்.
பெங்களூரிலிருந்து தயாரிக்கப்பட்டு லாரி,ரயில்,பேருந்து மூலமாக கோவைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும்,கர்நாடகவில் போதை பொருட்களுக்கு தடையில்லை என தெரிவித்த அதிகாரிகள் அதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.