September 7, 2018
தண்டோரா குழு
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர்,சிறைத்துறை காவலர்,தீயணைப்பு படை வீரர் ஆகிய பணிகளுக்கான உடற்தகுதி தேர்வு இன்று துவங்கியது.
கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர்,சிறைதுறை காவலர்,தீயணைப்பு துறை காவலர் ஆகிய பணிகளுக்கான உடற்தகுதி தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு இன்று துவங்கி நடைபெற்று வருகின்றது.கோவை,திருப்பூர்,ஈரோடு,நீலகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து விண்ணப்பித்திருந்த 1838 பேர் இந்த தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இந்த தேர்வுகள் இன்று முதல் வரும் 11 ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளன.
கோவை சரக டிஐஜி கார்த்திகேயன் தலைமையில் இந்த தேர்வுகள் நடை பெற்று வருகின்றன.முதல் நாளான இன்று காவலர் பணிக்காக கலந்துக் கொண்டு இருக்கும் ஆண்களின் உயரம்,எடை மார்பளவு ஆகியவையும்,1500 மீட்டர் ஓட்டம் ஆகியவையும் நடத்தப்படுகின்றது.இந்த தேர்விற்கு வரும் நபர்கள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகின்றனர்.அழைப்பு கடிதம் கொண்டு வருபவர்கள் மட்டும் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும்,தேர்வு நடைபெறும் வளாகத்தில் கைபேசி,கேமரா,ஸ்மார்ட் வாட்ச் போன்றவை அனுமதிக்கப்படவில்லை.நாளை பெண்களுக்கான உடற்தகுதி தேர்வும், அதன் பின்னர் உயரம் தாண்டுதல்,100 மீட்டர் ஓட்டம்,கயிறு ஏறுதல் போன்ற போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.