November 9, 2018 தண்டோரா குழு
கோவை,திருப்பூர்,நீலகிரி,ஈரோடு மற்றும் சேலத்தில் பன்றி காய்ச்சல்,டெங்கு காய்ச்சல்,மூளை காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.கோவை மட்டுமின்றி,கோவையை சுற்றியுள்ள இந்த மாவட்டங்களிலிருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால்,கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு துவங்கப்பட்டிருந்தாலும்,உயிரிறப்பும் அதிகரித்து வருகின்றது.தினமும் சராசரியாக இந்த காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,கோவை பீளமேடு அடுத்த காந்திநகரை சேர்ந்த சிவசக்தியின் மனைவி காயத்ரி(28)கடந்த ஒரு வார காலமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்,நேற்று கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தநிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பலியானார்.இதே போல், கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த புஷ்பா(40) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 3 நாளில் கோவை அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆகவும்,கடந்த 2 வாரத்தில் 33 ஆகவும்,கடந்த 2 மாதங்களில் 43 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.