September 10, 2018
தண்டோரா குழு
காவல்துறை பெண் அதிகாரிகளை மிரட்டிய ரவுடி புல்லட் நாகராஜனை பெரியகுளத்தில் போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன்.இவர் மீது கொலை,கொள்ளை,ஆள்கடத்தல்,வழிபறி என ஏராளமான வழக்குகள் உள்ளன.தற்போது வழக்கறிஞராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது.இவரது அண்ணன் 2006ல் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறைச்சாலையில் உடல் பரிசோதனை செய்ய வந்த டாக்டரிடம் தனக்கு தூக்க மாத்திரை வேண்டும் எனக் கேட்டுள்ளார்.இதற்கு அவர் தர மறுத்ததால் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி பெண் மருத்துவர் மீது வீசினார்.இதையறிந்த மதுரை சிறைத்துறை பெண் எஸ்பி ஊர்மிளா காவலர்களை அனுப்பி நாகராஜனின் அண்ணனை அடித்துள்ளனர்.
இதையடுத்து,எஸ்.பி. ஊர்மிளாவிற்கு புல்லட் நாகராஜ் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.சிறைக்குள் இருந்து வெளியில் வந்தால் வீடு திரும்ப முடியாது என்றும் மிரட்டியுள்ளார்.அந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் போன் செய்து புல்லட் நாகராஜன் மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரை மத்திய சிறை அலுவலர் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில்,புல்லட் நாகராஜ் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மதுரை மாநகர காவல் ஆணையர் தேவாசீர்வாதம் உத்தரவிட்டிருந்தார்.இதனடிப்படையில்,கொலை மிரட்டல் பொது இடத்தில் அருவருப்பான வார்த்தைகளால் பேசி மிரட்டுவது,அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் அச்சுறுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
போலீஸாருக்கே பெரும் சவாலாக உள்ள புல்லட் நாகராஜனை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதற்கிடையில்,நேற்றும் ஒரு மிரட்டல் ஆடியோவை புல்லெட் நாகராஜ் வெளியிட்டார்.இந்நிலையில் தென்கரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற புல்லெட் நாகராஜை விரட்டிச்சென்று பெரியகுளம் டி.எஸ்.பி ஆறுமுகம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.