October 23, 2018
தண்டோரா குழு
அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட விமர்சனத்துக்குள்ளான ஜெயலலிதாவின் பழைய சிலை அகற்றப்பட்டு அங்கு விரைவில் அமைக்கப்படும் எனத் தெரிகிறது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவிற்கு கடந்த பிப்ரவரி 24 அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் 7 அடி உயர முழு உருவச்சிலை திறக்கப்பட்டது.ஆனால்,அந்த சிலை ஜெயலலிதாவின் கம்பீரம்,அவரது உருவம் எதுவும் இல்லை என விமர்சனம் வைக்கப்பட்டது.சமூக வலைத்தளங்களிலும் சிலை குறித்து விமர்சனங்கள் எழுந்தது.இதனால்,அமைச்சர்கள் வேறு சிலை விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து,ஆந்திராவிலிருக்கும் ரமேஷ் என்கிற சிற்பி தலைமையிலான குழுவிடம் ஜெயலலிதாவின் சிலை தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.இம்முறை செய்யப்படும் சிலை ஜெயலலிதா போன்று தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.இதனால் கடந்த 8 மாதங்களாக சிலை செய்யும் பணி தீவிரமாகவும் கவனமாகவும் நடந்தது.
இந்நிலையில் தற்போது சிலை முழுமையாக தத்ரூபமாகத் தயாராகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது உருவாகியுள்ள ஜெயலலிதாவின் சிலை மாதிரி வெளியாகி உள்ளது.அதில் ஜெயலலிதாவின் உருவம் சிரித்த முகத்துடன் வலது கையை உயர்த்தி இரட்டை விரலைக் காட்டும் வகையில் தத்ரூபமாக அமைந்துள்ளது.இதனால்,விரைவில் தற்போதுள்ள சிலை அகற்றப்பட்டு அங்கு புது சிலை வைக்கப்படும் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.