October 23, 2018
தண்டோரா குழு
பதவி சுகத்துக்கும்,பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடனும் வருபவர்களை பக்கத்தில் சேர்க்கமாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நமது மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என் அனுமதி இல்லாமல் நடந்ததாக சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவது என் கவனத்திற்கு வந்தது.அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.நம் மன்ற உறுப்பினர்கள் நியமனம்,மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு என் ஒப்புதலுடன் தான் அறிவிக்கப்படுகின்றன.
கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே,`நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்துப் பதவி வாங்ணும்,பணம் சம்பாதிக்கணும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்கமாட்டேன்.அப்படிப் பட்டவர்கள் இப்போதே விலகி விடுங்கள்’ என்று நான் கூறியிருந்தேன் என்று தெளிவாகக் கூறியிருந்தேன்.
நான் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயத்தை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.முதலில் நீங்கள் உங்கள் தாய்,தந்தை மற்றும் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு தான் மற்றவை எல்லாம்.தன் குடும்பத்தை பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்காக யாரும் வரவேண்டாம்.மன்றத்திற்காக யாரையும் செலவு செய்ய வேண்டும் என்று நான் சொன்னது கிடையாது.நான் மன்றத்தினருக்குக் கொடுத்த வேலை,பணம்,செலவு செய்து முடிக்க வேண்டிய வேலையும் கிடையாது.அதனால் யாராவது என்னிடம் வந்து நான் மன்றத்திற்காக பணம் செலவு செய்தேன் என்று சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்று தான் அர்த்தம்.
ஒரு புதிய அரசியலை அறிமுகப்படுத்தி,அதன்மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்கவே அரசியலுக்கு வருகிறோம்.மக்கள் ஆதரவு இல்லாமல் அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது.மன்றத்திற்காக உண்மையாக உழைக்கும் எல்லோரது செயல்பாடுகளையும் நான் நன்கு அறிவேன்; அவர்களது உழைப்பு வீண் போகாது”. இவ்வாறு கூறியுள்ளார்.