September 14, 2018
தண்டோரா குழு
சேலம் – சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை- சேலம் இடையிலான 8 வழிச்சாலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சுமார் 270 கி.மீ தொலைவில் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்காக நிலம் கையப்படுத்தும் பணி அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், 8 வழிச்சாலை விளைநிலங்கள் வழியாக செல்வதால் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில்,விவசாய நிலங்களில் செல்வதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 8 வழிச்சாலை திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், 8 வழிச்சாலை திட்டத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் திட்டத்தை இறுதி செய்யும்வரை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து,அறிக்கையில் முரண்பாடு உள்ளதால், 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், 8 வழிச்சாலை திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில், வனத்துறை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து உள்ளது.