October 20, 2018
தண்டோரா குழு
தமிழக அரசு மக்களுக்கான அரசு என்பதில் முழு மூச்சாக இருக்கிறோம் என தமிழக கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ஏழை எளியோர் இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும் என பணியாற்றி வருகிறோம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் விலையில்லா ஆடு எட்டரை லட்சம் பேருக்கு கொடுத்துள்ளோம்.இந்தாண்டு ஒன்றரை லட்சம் ஆடுகள் கொடுத்துள்ளோம்.
கடந்த காலங்களில் மேற்கு மண்டலங்களில் இல்லாத கறவை மாடுகள் திட்டத்தில் தற்போது பயனாளிகள் 12500 பேர் தேர்வாகியுள்ளனர்.கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 77 ஆயிரம் பேருக்கு 50 நாட்டுக்கோழி வழங்கும் திட்டம் டெண்டர் கோரப்பட்டு முதல்வர் விரைவில் துவங்கவுள்ளார்.
கமலஹாசன் எது எங்கு என தெரிந்து பேச வேண்டும்.பொத்தாம் பொதுவாக தமிழகத்தில் ஏதோ நடக்கிறது என்று கூறி அரசியல் செய்ய நினைக்கிறார்.முதல்வரும் மற்ற அமைச்சர்களும் ஏழை எளியோருக்காக என்ன திட்டங்களை செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு இருக்கிறோம்.
மற்ற மாநிலங்களை விட தமிழகம் தான் ஒவ்வொரு துறையிலும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. அன்புமணி ராமதாஸ் எதிர்கட்சியில் இருக்கிறோம் என்பதற்காக சொல்லி கொண்டு வருகிறார்.எங்களை பொறுத்தவரை விஷன் 2023 ஆண்டில் ஏழை எளியோர் இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியில் அனைவரும் உயர வேண்டும் என்பதே நோக்கம்.சபரிமலை கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும்.கோவிலில் அரசியல் செய்வது என்பது இருக்க கூடாது”இவ்வாறு பேசினார்.