December 31, 2018
-ச.ச.சிவசங்கர்
நவீன காலத்தில் மிக முக்கிய பொருளாக மாறிப்போன பிளாஸ்டிக் நுகர்வு அதன் அபாய கட்டத்தை நெருங்கியிருப்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சமூகஆர்வலர்களும் கூறிவந்த நிலையில் அதற்கு தீர்வாக பிளாஸ்ட்டிக்கில் சில விதிகளை அவ்வப்போது கொண்டுவந்தனர். மக்கும் அளவிற்கு 40 மைக்ரோன் 50 மைக்ரோன் என பிளாஸ்டிக் தயாரிப்பில் சிலவிதிகளை கொண்டுவந்தனர்.
சூழலியலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மக்காத பிளாஸ்டிக்கை பயன்படுத்த கூடாது என்றிருக்க பூரணமாக பிளாஸ்டிக் தடைக்கு முதல்வர் பழனிசாமி கடந்த ஜூன் 5ம் தேதி சட்டப்பேரவையில் விதிஎண் 110ன் கீழ்அறிவித்தார். 2019 புத்தாண்டு பிளாஸ்டிக் இல்லா புத்தாண்டாக அமையவிருக்கிறது.
ஒவ்வொரு புத்தாண்டிலும் புதிய மாற்றங்களும் வளர்ச்சியும் இருக்க வேண்டு என்பதே அனைவரின் கனவும், அதற்கு அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவுவரவேற்கத்க்கது. ஆனால் இந்த புத்தாண்டு சிறுகுறு வியாபரிகளுக்கு அத்தனை மகிழ்ச்சியை தருவதாயில்லை, அதாவது பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்றாக எதையும் அறிமுகப்படுத்தாதது சிறுகுறு வியாபாரிகளிடம் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான வியாபரிகளும் பிளாஸ்டிக் தடைக்கு ஆதரவாக இருக்கும் அதேவேளையில் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்ற கேள்விக்கு தள்ளப்பட்டுள்ளனர் வியாபாரிகள். ஜனவரி 1க்கு பின் அவர்களின் சவால்கள் என்ன வென்று பார்ப்போம்.
சதாசிவம் ( பூக்கடை வியாபாரி) 
”முன்னாடிலாம் நாங்க பேப்பர்ல போட்டு தான் கொடுப்போம், அப்புறம் பிளாஸ்டிக் கவர் வந்ததும் அதுக்கு மாறிட்டோம். அது தான் எங்களுக்கு சவுகரியமாக இருக்கும். இந்த சமயத்துல பிளாஸ்டிக் தடை பன்றது எங்களுக்கு கொஞ்சம் சிரமம்தான். அதுக்காக பிளாஸ்டிக்கு ஆதரவா பேசல எங்களுக்கு வேறவழியில்ல, இன்னும் தரம் அதிகமான கவர்ல போட்டா எங்களுக்கு வருமானம் கட்டாது. அந்த சமயத்தில எங்க வியாபாரம் ரொம்பபாதிக்கும். விலைவாசி அதிகமாகும் நாங்க என்ன செய்யமுடியும்? இதுக்கு அரசாங்கம் தான் உடனடி தீர்வு சொல்லனும். அப்போதான் எங்கள மாதிரியான சின்ன வியாபாரிகள் பொழப்பு நடத்தமுடியும்” என்கிறார்.
ரஹ்மதுல்லா: (செருப்பு வியாபாரி)
நுகர்வு கலாச்சாரம் அதிகரித்து வரும் இந்த காலத்தில் ஒருபொருள் ஒவ்வொருவரிடமும் தேவைக்கு அதிகமாக பயன்பாடு உள்ளது. அதில் காலணிகளும் (செருப்பு) ஒன்று, கடைவீதியில் நடந்து சென்ற போது சுற்றியும் செருப்புகடை இருந்ததைபார்த்தேன் அதில் அதிகமாக பிளாஸ்டிக்கின் புழக்கம் அதிகமாகஇருந்தது. அப்போது அந்த கடைக்காரரிடம் கேட்டபோது, இது ஒருவகையில் நல்ல முடிவுதான். ஆனால் இதற்கு மாற்று என்னவென்று அரசாங்கம் தான் சொல்ல வேண்டும், அரசாங்கம் என்ன சொன்னாலும் செய்து தான் ஆகவேண்டும்.
ஜாவித்(கறி கடை) 
பெரும் பாலான மக்களின் விருப்ப உணவாக இருப்பது அசைவம் தான், ஞாயிறு என்றாலே ஆடு, கோழிகளின் நுகர்வு அதிகரிக்கும் அந்நாளில் வீட்டிலிருந்து பாத்திரங்கள் எடுத்துச் செல்லும்பழக்கம் சற்று குறைவுதான். அந்த இடத்தை பிளாஸ்டிக் நிரப்புகிறது. இந்த பிளாஸ்டிக் தடை கொஞ்சம் சிரமம்தான். அவ்வப்போது இலையில், மடித்துகொடுப்போம், மேலும் இதற்காக மாற்று வழியை சொல்லவேண்டும் என்றார்.
நசீர்(மீன் கடை) 
கறிக்கடையை தொடர்ந்து மீன்கடையிலும் இந்த சிக்கல் அதிகமாக உள்ளது. மீன்கடை வைத்திருக்கும் நசீரிடம்கேட்டபோது, மீன்மார்கெட்க்கு வருபவர்கள் கூடையோ, பாத்திரங்கள் கொண்டுவருவார்கள் என்று சொல்ல முடியாது. பிளாஸ்டிக் உபயோகத்தால் கடல் வளமும் பாதிக்கபட்டுவருகிறது. அதனால் பிளாஸ்டிக் தடை நல்லது. இருப்பினும் வியாபார ரீதியாக எங்களுக்கு கொஞ்சம் பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு அரசாங்கம் நல்ல தீர்வை சொல்ல வேண்டும்.
ரவி (பழக்கடை)
பேருந்து நிலையத்தில் தள்ளு வண்டியில் பழக்கடை வைத்திருப்பவர் ரவி, பிளாஸ்டிக் தண்ணீர் டம்ளரில் பழங்களைவைத்து விற்று வருபவர். பிளாஸ்டிக் டம்ளர் வருகைக்கு பின் அதைநம்பி தொழில் தொடங்கியவர் இன்று செயதறியாமல் இருக்கிறார். உண்மையில் சிறுதொழில் இன்னும்மோசமாகும், அரசாங்கம் தான் ஒரு வழியை காட்டவேண்டும் என்று ஏக்கத்துடன் சொல்கிறார் பழக்கடை ரவி.
பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது என்று நாம் அனவைரும் அறிவோம். இருப்பினும் பிளாஸ்டிக்கிற்கு மாற்று வேறு என்ன கேள்வி இங்கு எழுகிறது. ஆரம்ப காலத்தில் பிளாஸ்டிக் இல்லாத போது நம் முன்னோர்கள் பொருட்களை வாங்க வீட்டில் இருந்து தான் மஞ்சப்பை மற்றும் பாத்திரங்களை எடுத்து சென்றுள்ளனர். ஆனால் காலப்போக்கில் பிளாஸ்டிக் வருகைக்கு பின் அதனை மறந்துவிட்டோம். பிளாஸ்டிக் தடை சிறுகுறு வியாபாரிகளை பாதிக்கும் என்பது ஏற்றுக்கொள்ள கூடியது தான். ஆனால் எதிர்கால தலைமுறையினரை மனதில் வைத்து மக்கள் நினைத்தால் இந்த பிளாஸ்டிக் தடை சாத்தியமே. பிளாஸ்டிக்கை தடுப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.