December 1, 2018
தண்டோரா குழு
கோவையில் நடைபெற்று வரும் மருத்துவர் மாநாட்டிற்காக சிலர் சொந்த வாகனங்களை,டூரிஸ்ட் வாகனங்களாக பயன்படுத்தியதால் அனைத்திந்திய டூரிஸ்ட் வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 5 சொந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் மருத்துவர்களுக்கான மாநாடு நடைபெற்று வருகிறது.இதற்காக மருத்துவர்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ள 900க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த மாநாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் சொந்த கார்களை பலர் டூரிஸ்ட் கார்களாக பயன்படுத்தி வருவதாக கூறி டூரிஸ்ட் டாக்சி ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்திந்திய டூரிஸ்ட் வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் 300 க்கும் மேற்பட்ட சொந்த வாகனங்கள்,டூரிஸ்ட் வாகனங்களாக பயன்படுத்தியது தெரியவந்தது.இதனால் உடனடியாக அப்பகுதியில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் 5 வாகனங்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.சொந்த வாகனங்களை விட டூரிஸ்ட் வாகனங்களுக்கு அதிக வரி செலுத்தி ஓட்டி வரும் சூழலில்,இது போன்ற செயல்களால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக டூரிஸ்ட் ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.