October 19, 2018
தண்டோரா குழு
சபரிமலை பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு,கேரளா,கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28–ந் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில்,ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த புதனன்று திறக்கப்பட்டது. இதையடுத்து கோயிலுக்குள் செல்வதற்கு பெண்கள் வந்தனர்.கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை ஆந்திராவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் போலீஸ் உடையில் ஹெல்மெட் அணிந்து பலத்த எதிர்ப்புக்கு இடையே சன்னிதானத்தை நெருங்கினார்.அவருடன் இன்னொரு பெண் பக்தரும் சென்றார்.சன்னிதானத்தை நெருங்கிய பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து,சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளா,கர்நாடகா மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
அக்கடிதத்தில்,சபரிமலையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மேலும்,சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,தேவைப்பட்டால் சமூக வலைத்தளங்கள் மற்றும் இன்டர்நெட் சேவையை முடக்கி வைக்கவும் அறிவுறுத்தி உள்ளது.