October 19, 2018
தண்டோரா குழு
நாட்டிலேயே முதல் முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சையால் தாயின் கருப்பையின் மூலம் மகள் பெண் குழந்தை பெற்றுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரைச் சேர்ந்தவர் மீனாட்சி.இவரின் மகள் மீனாட்சி வாலன்(27).இவர் நீண்ட வருடங்களாகக் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளார்.இவருக்கு மூன்று முறை கருச்சிதைவு,மேலும் ஒரு முறை குழந்தை இறந்தே பிறந்துள்ளது.இதனால், மீனாட்சி வாலனின் கருப்பை இனிமேல் கருவைச் சுமக்கும் தகுதியை இழந்துவிட்டது எனக்கூறி அதை மருத்துவர்கள் அகற்றிவிட்டனர்.
இதனால் தனக்கு குழந்தை பிறக்கும் பாக்கியம் இல்லை என்று மீனாட்சி வாலன் ஏங்கியுள்ளார்.அப்போது,புனேவில் உள்ள தனியார் மருத்துவமனை மீனாட்சி வாலனின் தாய் மீனாட்சியிடம் அவரின் கருப்பையை மகளுக்குக் கொடுக்க சம்மதம் கேட்டனர்.அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து,னாட்சியின் தாய் அவருக்குக் கருப்பையைத் தானமாக வழங்கியுள்ளார். கடந்த வருடம் மே மாதம் மீனாட்சிக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.அதன்பின் 3 மாதங்கள் கண்காணிப்புக் காலத்தில் மீனாட்சி வாலன் வைக்கப்பட்டார்.இந்த 3 மாதங்களுக்குப் பின் பின் உடல்நிலை தேறியவுடன் மீனாட்சி வாலன் வதோதராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மீனாட்சி வாலனுக்கு மாதவிடாய் சுழற்சி சீரான நிலைக்கு வந்ததையடுத்து,புனே மருத்துவமனைக்கு மீனாட்சி வாலன் வந்தார்.அப்போது,மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின் படி,டெஸ்ட் ட்யூப் மூலம் கரு உருவாக்கப்பட்டு,கருப்பையில் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு,ஏறக்குறைய 31 வாரங்கள் அதாவது 7 மாதங்கள் நிறைவடைந்த பின்,குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில்,நேற்று அறுவை சிகிச்சை மூலம் மீனாட்சி வாலன் வயிற்றில் இருந்து பெண் குழந்தை எடுக்கப்பட்டது.குழந்தை 2 கிலோ எடையில் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும்,இன்னும் 2 வாரங்கள் வரை கண்காணிப்பில் வைத்து தாயிடம் ஒப்படைக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுவரை ஸ்வீடனில் 9 குழந்தையும், அமெரிக்காவில் 2 குழந்தைகளும் என 11 குழந்தைகள் மட்டுமே கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளது. நாட்டிலேயே மட்டுமல்ல, ஆசியாவிலேயே கருப்பை மாற்று மூலம் பிறந்த முதல்குழந்தை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.