March 23, 2019
தண்டோரா குழு
ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகம் முழுவதும் அரசு சுவர்களில் எழுதப்பட்ட 1,77,977 தேர்தல் விளம்பரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 2,033 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தனியார் சுவர்களில் எழுதப்பட்ட 1,43,930 தேர்தல் விளம்பரங்கள் அளிக்கப்பட்டு 148 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்களை அகற்றுவதற்கான செலவுகளை கட்சி மற்றும் வேட்பாளரிடம் இருந்து பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 50 ஆயிரத்துக்கு மேல் வெளியில் எடுத்துச் செல்லும்போது, வங்கியில் பணம் எடுத்ததற்குரிய ரசீது அல்லது ஏடிஎம் ரசீதுகளை ஆதாரமாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள். தமிழகத்தில் இதுவரை 209 கிலோ தங்கம், 310 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் ரூ.30 கோடி ரொக்க பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால் ரூ.4.45 கோடி பணம் மற்றும் 94 கிலோ தங்கம் திருப்பி தரப்பட்டுள்ளது.
சூலூர், ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். ஒட்டப்பிடாரம் தொகுதி காலியாக உள்ளது குறித்து தலைமை தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கின் தீர்ப்பு நகல் கிடைத்துவிட்டது. சூலூர் தொகுதி குறித்து விரைவில் அறிக்கை அனுப்புவோம். ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் வழக்குகள் முடிந்துள்ளன. அரவக்குறிச்சி தேர்தல் வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது என்றார்.