March 11, 2019 தண்டோரா குழு
18 சட்டப்பேரவை தொகுதிகளோடு அறிவிக்கப்படாத மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்திட வலியுறுத்தி, திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப் பதிவு நடைபெறும் எனவும் மூன்று தொகுதிகள் மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அங்கு தேர்தல் நடத்த முடியாது எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் துரைமுருகன் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், அறிவிக்கப்படாத அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் 18 தொகுதிகளோடு சேர்த்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.