December 31, 2018
பி.எம். முஹம்மது ஆஷிக்
தமிழக அரசியலில் 2018 முக்கிய வருடம் என்றே சொல்லலாம்.அந்த அளவிற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பல போராட்டங்கள், நிறைய அறிக்கைகள், புதிய தலைவர்கள் புதிய அரசியல் கட்சிகள் என தமிழகம் பலவற்றை சந்தித்துள்ளது. அதிலும் அரசியல் கட்சிகள் துவங்கியதில் இந்த வருடம் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஏனெனில்,இந்த வருடத்தில் தமிழ்நாட்டில் மட்டும் புதிதாக நிறைய அரசியல் கட்சிகள் துவங்கப்பட்டுள்ளது. அதைபோல் ஏற்கனவே இருந்த கட்சி மீண்டும் புதுப்பிக்கப்பட்டும் உள்ளது.
2018ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கட்சிகளின் என்பதை பார்ப்போம் !
மக்கள் நீதி மய்யம் – கமல்ஹாசன்
2018ம் ஆண்டில் முதல் அரசியல் கணக்கை தொடங்கிவைத்தவர் நடிகர் கமல்ஹாசன் தான். ஜெயலலிதா மறைவிற்கு பின் டுவிட்டரில் தனது அரசியல் பயணத்தை துவங்கி கமல் தொடர்ந்து ஆளும் அதிமுக அரசை விமர்சித்து வந்தார். டுவிட்டர் மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் கருத்து தெரிவித்து வந்த கமல் பிப்ரவரி 21ம் தேதி மதுரை மாநாட்டில் அரசியல் கட்சியின் பெயரையும், கட்சிக்கொடியையும் அறிமுகப்படுத்தி அரசியல் களத்தில் குதித்தார்.
மக்கள் நீதி மய்யம் என்று தனது கட்சிக்கு பெயர் வைத்த கமல்ஹாசன் கட்சியின் கொடியில் ஆறு கைகள் இணைந்திருக்கும் நடுவில் ஒரு நட்சத்திரம். சிவப்பு, வெள்ளை, கறுப்பு ஆகிய நிறங்கள் இருக்கும். ‘சிவப்பு நிறம் உழைப்பையும், வெண்மை நிறம் நேர்மையையும், கறுப்பு நிறம் திராவிடத்தையும் குறிக்கும். எட்டு முனை நட்சத்திரம் தென்னாட்டு மக்களைக் குறிக்கும் என்றும், மக்கள் நலனே கட்சியின் கொள்கை என்றும் தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் – டிடிவி தினகரன்
ஜெயலலிதா மறைவிற்கு அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது சசிகலாவால் அதிமுக துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருக்கும் போதே அதிமுக சின்னத்தையும், கட்சி பெயரையும் மீட்பதற்கு லஞ்சம் அளித்ததாகக்கூறப்பட்டது. அதன்பின் அவர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இதனால், அதிமுக ஓ.பி.எஸ். அணி, ஈ.பி.எஸ். அணி, தினகரன் அணி என மூன்றாக பிரிந்தது. ஒரு கட்டத்தில்
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் ஒன்றாக இருந்தது. இதில் தினகரன் தனித்து விடப்பட்டார். பின்னர், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் சுயேட்சையாக நின்று வென்றார். தினகரனுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் 2018 மார்ச் 15, மதுரை மாநாட்டில் டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்கினார். கட்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்தார். கட்சிக்கொடியில் கறுப்பு, வெள்ளை, சிவப்பு நடுவில் ஜெயலலிதா படம்.
அதிமுகவையும், சின்னத்தையும் மீட்பதே எங்கள் இலட்சியம் என்றும் கூறியுள்ளார்.
நித்தியானந்தா சேனை – நித்யானந்தா
ஏப்ரல் 29ம் தேதி தமிழகத்தில் ஆங்காங்கே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. காரணம் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா புதிய அரசியல் கட்சி துவங்கி விட்டார் என்பது தான்.
நித்தியானந்தா சேனை’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தக் கட்சியில் தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என்ற வாசகத்துடன் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.எனினும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ – நீதிபதி கர்ணன்
சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதியாக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணன் சக நீதிபதிகள் சிலர் மீது ஊழல் புகார் கூறியதை தொடர்ந்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதன்பின் சர்ச்சைகளில் சிக்கி சிறை சென்று வெளிவந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த நீதிபதி கர்ணன் ஜூன் 08ம் தேதி புதிய கட்சி தொடங்கினார். அவரது கட்சிக்கு ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
‘அண்ணா திராவிட கழகம் – திவாகரன்
டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கிய பிறகு சில நாட்களில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் தினகரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி ஊடகங்களில் குறை கூறினார். சிறையில் இருந்த சசிகலாவின் ஆதரவும் தினகரன் பக்கம் இருந்தது. இதனால், “இனி சசிகலாவை அக்கா என்று கூறமாட்டேன்” என்று திவாகரன் தெரிவித்தார். பின்னர், ஜூன் 10ம் தேதி ‘அண்ணா திராவிட கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை துவங்கினார்.
இக்கட்சியின் கொடியில் சிவப்பு, வெள்ளை, கருப்பு நிறங்களும் கொடியின் நடுவே பச்சை நிறத்தில் நட்சத்திரமும் உள்ளது. மேலும், இந்த கட்சியின் பொதுச்செயலாளராக தானே செயல்படுவேன் என திவாகரன் தெரிவித்துள்ளார். புதிய கட்சி கொடியில் உள்ள கருப்பு, சமுதாயத்தின் ஏற்ற தாழ்வுகளை குறிக்கிறது என்று விளக்கம் தந்துள்ளார்.
அண்ணா எம்ஜிஆர் மக்கள் கழகம் – பாஸ்கரன்
சசிகலா குடும்பத்திலிருந்து, மேலும் ஒரு கட்சி, துவக்கப்பட்டது. தினகரன் தம்பி பாஸ்கரன், ‘அண்ணா எம்.ஜி.ஆர்., மக்கள் கழகம்’ என்ற, புதிய கட்சியை துவக்கியதுடன், கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார். அவர் அறிமுகப்படுத்திய கொடியில், மேலே காவி, நடுவில் பச்சை, கீழே கருப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் கருப்பு கண்ணாடியுடனான எம்ஜிஆர் படமும் இருந்தது. பின்னர் 15 வருடம் குஜராத்தில் முதல்வராகவும், 4 வருடம் இந்திய பிரதமராக இருக்கும் மோடி மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்றும் மீண்டும் என் முழு ஆதரவும், மோடிக்கு உண்டு அவரை மீண்டும் முதல்வராக்க பாடுபடுவேன் என்றார்.
டி.ராஜேந்திரன்
நடிகரும் தயாரிப்பாளருமான டி.ராஜேந்திரன் தனது கட்சியின் பெயரான லட்சிய தி.மு.க. என்ற பெயரை இலட்சிய தி.மு.க. என்று மாற்றினார்.
கார்த்திக் – மனித உரிமை காக்கும் கட்சி
நடிகர் கார்த்திக் 2006ம் ஆண்டு ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியில் இருந்தார். பின்னர் 2009ம் ஆண்டு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சி 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டது. இதற்கிடையில், அரசியலில் இருந்து சிலகாலம் விலகியிருந்த நடிகர் கார்த்திக், இந்த ஆண்டு மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ளார். நெல்லை டிசம்பர் 16ம் தேதி மனித உரிமை காக்கும் கட்சி என்று புதிய கட்சியை அறிமுகப்படுத்தினார்.
இயக்குநர் கெளதமன்:
இயக்குனர் கவுதமன் புதுக்கட்சி குறித்த அறிவிப்பை 2019ம் ஆண்டு பொங்கல் அன்று அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதை தவிர தமிழகத்தில் சில சிறிய கட்சிகளும் உதயமாகியுள்ளன. வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய கட்சிகள் உதயமாகி கொண்டே வருகிறது.