February 11, 2019
தண்டோரா குழு
தமிழக அரசின் 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவி என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110- விதி எண் இன் கீழ் ஒரு அறிவிப்புபை வெளியிட்டார் அதில் “தமிழக அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.
பல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இந்த ஆண்டு தமிழக அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர். இதற்கென, 1,200 கோடி ரூபாய் 2018-19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவி என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,
“ஏழைகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வரவேற்கத்தக்கது. அதை நிரந்தரமாக்க வேண்டும். ஏழைக் குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இந்த நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள ராமதாஸ், அவ்வாறு அறிவித்தால் அது தமிழ்நாட்டின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் மிக முக்கிய மைல்கல்லாக அமையும் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசின் இந்த நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவி என்றும் அவர் பாராட்டியுள்ளார்.