September 4, 2020
தண்டோரா குழு
கோவையில் காதலிக்க மறுத்த 17 வயது சிறுமியின் புகைப்படத்தை இணையதளத்தில் பரப்புவேன் என மிரட்டிய இளைஞரை மதுக்கரை போலீஸார் போக்ஸோவில் கைது செய்தனர்.
கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் தமிழ்ச்செல்வன் (20). இவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார். தமிழ்ச்செல்வன் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் நட்பாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு சிறுமியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தான் நட்பாக மட்டுமே பழகி வந்ததாக தமிழ்ச்செல்வனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் சிறுமியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி உள்ளார்.
மேலும் சிறுமியின் புகைப்படத்தை மாற்றி இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார். இதையடுத்து சிறுமி நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மதுக்கரை போலீஸில் புகார் அளித்தார்.இதையடுத்து சிறுமியை தாக்கி புகைபடங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய தமிழ்ச்செல்வனை கைது செய்து அவர் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மற்றும் போக்ஸோவில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.