July 16, 2020
தண்டோரா குழு
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இணையதளம் மூலம் இன்று காலை தேர்வுதுறை வெளியிட்டது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத பள்ளி மாணக்கர்களாகவும்,தனித்தேர்வர்களாகவும் மொத்தம் 7,99,717 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் பள்ளி தேர்வர்களாக 7,79,931 பேர் தேர்வு எழுதினர். அதில் மாணவியர்கள் 4,24,285 பேரும் 3,55,646 மாணவர்களும் தேர்வு எழுதினர். மேலும் பொதுப் பாடப்பிரிவில் 7,28,516 பேரும், தொழிற்பாடப்பிரிவில் 51,415 பேரும் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று திடீரென வெளியிடப்பட்டது. பொதுத்தேர்வு முடிவுகளைtnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். இன்று வெளியான தேர்வு முடிவுகளில் 92.3 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்களில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 89.41% மாணவர்களும் 94.80 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 5.39% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதல் மூன்று மாவட்டங்கள்:
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.12% தேர்ச்சி விகித்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தையும், 96.99% தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு 2ம் இடத்தையும், 96.39% தேர்ச்சி விகிதத்துடன் கோவை மாவட்டம் 3ம் இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் 12ம் வகுப்பு தேர்வில் சிறைவாசிகள் 50 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.