March 20, 2019 தண்டோரா குழு
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி இன்று சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்தார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். இது தொடா்பாக தமிழக அரசு சார்பில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. அதைபோல் ஆளுநா் பன்வாரிலால் புரோகித் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு ஒன்றையும் நியமித்து விசாரணைகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையில், ஜாமீன் கோரி நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பல முறை மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் நிர்மலா தேவி ஜாமீன் குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அப்போது தமிழக அரசு நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்குவதில் தங்கள் தரப்பில் எவ்வித தடையும் இல்லை ஜாமீன் குறித்து சிபிசிஐடி தரப்பு மார்ச் 11ஆம் தேதி பதிலளிக்குமாறு கூறியது. அதன்படி மார்ச் 11 ஆம் தேதி நிர்மலா தேவி ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, மார்ச் 12 ஆம் தேதி அவரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்குவதில் தங்கள் தரப்பில் எதிர்ப்பு எதுவும் இல்லை என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நீதிபதிகள் ஜாமீன் வழங்கினர்.
மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதோடு, அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது என்ற நிபந்தனையுடன் நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் 11 மாத சிறை வாசத்திற்கு பின் இன்று மதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி ஜாமீனில் வெளியில் வந்தார்.