February 13, 2020
என்னை 100 முறை சிறையில் அடைத்தாலும் எனது போராட்டம் தொடரும் கோவை மத்திய சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அதிமுக முன்னாள் எம்பி கேசி.பழனிச்சாமி பேசியுள்ளார்.
அதிமுக முன்னாள் எம்பியான கேசி.பழனிச்சாமி, அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக, முத்துக்கவுண்டனூர் ஊராட்சி தலைவர் கந்தவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில், சூலூர் காவல்துறையினர் கடந்த ஜனவரி 25ந்தேதி கேசி.பழனிச்சாமியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது, ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் , சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கேசி.பழனிச்சாமி சூலூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இருமுறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நேற்று (11-2-20) நீதிபதி சக்திவேல் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அதன்படி மறு உத்திரவு வரும் வரை சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் காலை மற்றும் மாலையில் கையெழுத்திட உத்திரவிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கேசி.பழனிச்சாமி கோவை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-
எனக்கு ஜாமீன் வழங்கியதாக ஊடகங்களில் செய்திகள் வந்தும் என்னை இன்றுதான் வெளியே விட்டார். அவர்களது கையில் அதிகாரபூர்வமாக நீதிமன்றத்தின் நகல் கிடைக்கவில்லை என்றனர். இதேபோல்தான் அதிமுகவிலிருந்து, என்னை நீக்கியதாக இதுவரை, எழுத்துபூர்வமாக எனக்கு கடிதம் எனக்கு கொடுக்கப்படவில்லை.
சிறை வைத்தது என்னை அல்ல.எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கொள்கைகளை சிறை வைத்தனர். இன்னும் உறுதியாக இருப்பேன். சிறை வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். என்னை நீக்கியதாக என் விலாசத்திற்கு கடிதம் அனுப்பியதற்கு ஆதாரம் அதிமுகவிடம் இருக்கின்றதா? என கேள்வி எழுப்பியவர், என்னை கைது செய்யும் போது , என் வீட்டிற்குள் பத்திரிகையாளர்களை காவல் துறை அனுமதிக்க மறுத்தனர். 100 முறை என்னை சிறை வைத்தாலும் நான் அதிமுகவில் தான் இருப்பேன், எனது போராட்டம் தொடரும்.
முன்பை விட அதிக உத்வேகத்துடன் வழக்குகளை நடத்துவேன் என்று கூறினார்.