May 8, 2026
தண்டோரா குழு
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்ட நிலையில், கோவை மாவட்டம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
“பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்விப் பயணத்தை தொடங்கவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். உழைப்பும், விடாமுயற்சியும் மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறைகளை தேர்வு செய்து நாட்டின் வளர்ச்சிக்கான தூண்களாக உருவாக வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறாத மாணவர்கள் மனம் தளராமல் எதிர்கால வாய்ப்புகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.