April 20, 2018 தண்டோரா குழு
தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வரும் ஹெச்.ராஜாவும்,எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் கை வைத்து பேசியது சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பின்னர் ஆளுநர் அவரிடம் மன்னிப்பும் கோரினார்.இதற்கிடையில்,தற்போது பெண் பத்திரிகையாளர்களை தரகுறைவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் தரகுறைவான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர்,
ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு விளம்பரம் தேடுவதே வேலை.முதல்வர் பற்றி அவதூறாக பேசிய ஹெச்.ராஜா மீது அரசே வழக்கு தொடரும்.பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுத்தால் நிச்சயம் அரசு நடவடிக்கை எடுத்து கைது செய்யும்.
தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வரும் ஹெச்.ராஜாவும்,எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள் என அமைச்சர் கூறினார்.
மேலும்,பேராசிரியை விவகாரத்தில்,காவல்துறை உண்மை நிலையை வெளிக்கொண்டுவரும், யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை,ஆளுநர் உத்தரவிட்டுள்ள விசாரணை,சிபிசிஐடி விசாரணையை பாதிக்காது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.