December 10, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனதை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு நடத்தினார். ஆய்வு நடத்தி அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் மூன்று தினங்களுக்கு முன்பாக இந்த குழு தாக்கல் செய்தது.48 தனித்தனி சீலிடப்பட்ட கவர்களில் நிலத்தடி நீர்,காற்று மாசு,சுற்றுப்புறச்சூழல் மாசு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததற்கான அறிக்கை தாக்கல் செய்தது. இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தருண் அகர்வால் குழு வழங்கிய பரிந்துரைகள் தெரியவந்தது. அதில், ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உரிய காரணம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையிடம் தமிழக அரசு விளக்கம் கேட்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையின் நியாயத்தை கேட்காமல் தமிழக அரசு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. நிலத்தடி நீர், காற்று மாசு ஆகியவற்றை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து ஆய்வு செய்யலாம் என தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்குல் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமை திர்ப்பாயத் தலைவர் ஏ.கே கோயல் அறிவித்துள்ளார்.