March 27, 2019 தண்டோரா குழு
பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் நடந்த மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலை வழக்குகளின் பயணம் :
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆலையை திறக்கக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதற்கிடையில் ஆலையை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்தது. இதையடுத்து, ஆலை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மீண்டும் அனுமதி :
அந்த வழக்கில் ஆலையை திறக்க கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை நிறுத்திவைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆலையை மூடவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடைவிதிக்கவும் மறுப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது.
அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு மீண்டும் மேல் முறையீடு :
இதையடுத்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அதைப்போல் ஆலையை திறக்க அனுமதி கேட்டு ஸ்டெர்லைட் நிர்வாகமும் வழக்கு தொடர்ந்தது. அதைப்போல், ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் சமூக ஆர்வலர் பாத்திமா பாபு ஆகியோரும் மனுத் தாக்கல் செய்தனர். இவ்வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 7-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மனுதாரர்கள் அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக கடந்த மாதம் 11-ம் தேதி தாக்கல் செய்தனர்.
உச்சநீதிமன்றம் தடை :
இந்நிலையில், இவ்வழக்கில் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி நீதிபதி ரோஹிந்தன் ஃபாலி நாரிமன் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க அதிகாரம் இல்லை என்று உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகி அனுமதி பெற்றுக்கொள்ள நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், ஆலையை திறக்கக்கோரி தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடிய வேதாந்தா :
இதனைதொடர்ந்து வேதாந்தா குழுமம் சார்பில் சென்னை உயர்நநீதிமன்றதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த ஆண்டு மே 28ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அடுத்த 5 வருடத்துக்கு ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேவையான அனுமதி, உரிமம், சான்றிதழ்களை வழங்க தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆலையை திறக்காததால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வேதாந்தா நிறுவனம் தனது மனுவில் தெரிவித்து இருந்தது.
உயார்நீதிமன்றமும் தடை :
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பராமரிப்புப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் தூத்துக்குடியில் ஆலையை மூடிய பிறகு சுற்றுசூழல் மற்றும் நிலத்தடி நீரின் தரம் உயர்ந்துள்ளதா என்பது குறித்து தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ளவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.