December 15, 2018
தண்டோரா குழு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதனை தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர். கடும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில், இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சேலம் அடுத்த ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த உத்தரவை எதிர்த்து உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று அறிவித்தார்.
அதைபோல், கூட்டாக செய்தியார்களை சந்தித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், மற்றும் அமைச்சர் வேலுமணி ஆகியோர்,
ஸ்டெர்லைட் விவகாரத்தை, தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் இதை திறக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எத்தனையோ பிரச்சனைகள் வந்தபோதும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது எடப்பாடி பழனிச்சாமி அரசுதான் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதி மன்றம் செல்வோம் என்று அறிவித்தனர்.