January 2, 2021
தண்டோரா குழு
தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அமைச்சர், கட்சி பதவிகளை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,நிரூபிக்கவில்லை எனில் திமுக தலைவர் ஸ்டாலின் பதவி விலக தயாரா என சவால் விடுத்துள்ளார்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
திமுக தலைவர் ஸ்டாலின் என் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமில்லாத, அவதூறான குற்றச்சாட்டுகள் என தெரிவித்தார். மேலும் ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க தடையாக இருந்ததால் தன் மீதான கோபத்தில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைக்கிறார் எனவும், தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு செல்ல தயார் எனவும் கூறிய அவர், நிரூபிக்க முடியவில்லை எனில் ஸ்டாலின் பதவி விலக தயாரா என கேள்வி எழுப்பினார்.அமைச்சர் பதவி, சட்டமன்ற உறுப்பினர் பதவி, கட்சி பதவி ஆகியவற்றை ராஜினாமா செய்ய இப்போதே தயார் எனவும், ஸ்டாலின் எதிர் கட்சி தலைவர், திமுக கட்சி தலைவர் பதவிகளை ராஜினாமா செய்ய தயாரா எனவும் அவர் தெரிவித்தார். ஆண்மையுடன் சவால் விடுகிறேன்.
ஸ்டாலினுக்கு ஆண்மை இருந்தால் சவாலை ஏற்கட்டும் என அவர் கூறினார். மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்ணை குண்டர்களை வைத்து தாக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அப்பெண்ணை தாக்கியதற்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.