• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேளாண்மை பட்ஜெட் இனிப்பும், கசப்பும் நிறைந்த பட்ஜெட் ஆக உள்ளது விவசாயிகள் கருத்து

March 22, 2023 தண்டோரா குழு

தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதுதொடர்பாக விவசாயிகள், விவசாய சங்கங்கள் என பலரும் வேளாண்மை பட்ஜெட்டை வரவேற்றும், எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது உள்ளிட்டவைகள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்வதை வரவேற்கிறேன். பருத்தி உற்பத்தியை பெருக்கு ரூ.12 கோடி, அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்க தமிழக அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது மற்றும் ரூ.5 லட்சம் பணம் வழங்கல், வேளாண்மை பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள் 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ் ஆப் குழு, இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம், போன்ற பல்வேறு அறிவிப்புகள் மிகவும் வரவேற்கதக்கது.

அதே சமயம் பாண்டியாறு -புன்னம்புழா திட்டம், ஆனைமலை – நல்லாறு திட்டம் போன்ற திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகதாது மிகுந்த வருமத்தம் அளிக்கிறது. இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் மேற்கு மண்டல விவசாயிகள் மிகவும் பயன்பெறுவார்கள், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மாநில அரசிடம் நிதி இல்லை என்றால் ஒன்றிய அரசிடம் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்றலாம். கேரளா அரபிக் கடலில் வீணாக தண்ணீர் கலப்பதை தடுத்து இத்திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

வனவிலங்குகள் பயிர்களை சேதம்படுத்துகின்றன. இதற்கான நிதி என்பது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன இழப்பீடு வழங்கப்பட்டதோ அதே நிலையில் தான் உள்ளது. இதனை உயர்த்தி அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. புண்ணாக்கு விலை, தவிடு விலை, போன்றவைகள் உயர்ந்த நிலையில் கால்நடை விவசாயிகள் படும் துயரம் அதிகம். பால் கொள்முதலுக்கான விலையை விவசாயிகள் கேட்பது உயர்த்தி அறிவிக்க நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களை விவசாய வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்த அறிவிப்பு வராதது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என நகர்புற விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இனிப்பும், கசப்பும் நிறைந்த பட்ஜெட் ஆக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் செயல் தலைவர் வெற்றி பழனிசாமி கூறுகையில், ‘‘

சிறுதானியங்களை ரேஷன் கடையில் விற்பது, சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்குவது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது வரவேற்கதக்கது. குறிப்பாக இயற்கை விவசாயிகளை ஊக்குவித்து ரொக்க பணம், பாராட்டு சான்றிதழ் வழங்குவது வரவேற்கதக்கது. வண்டல் மண் தொடர்பாக சிறந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கப்படும் என்கிற அறிவிப்பு மிகவும் வரவேற்கதக்கது. இதுபோன்ற பல்வேறு வரவேற்கும் அம்சங்கள் உள்ளன.

அதே சமயம் தென்னை விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. தேங்காய் கொள்முதல் விலைகளை அறிவிக்க வேண்டும். மலேசியா போன்ற நாடுகளில் இருந்து பாமாயில் கொள்முதலை நிறுத்திவிட்டு தேங்காய் எண்ணெய் உபயோகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெய்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்,’’ என்றார்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேனு கோபால் கூறுகையில்,

‘‘வனவிலங்கு மனித மோதல்கள், பயிர் சேதங்களை தடுப்பதற்கான அறிவிப்புகள் எதுவும் பெரிதாக இல்லை. வனவிலங்குகள் பிரச்சனைகள் தொடர்பாக குழு தான் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். யானை வராமல் இருக்க, பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க போன்ற அறிவிப்புகள் எதுவும் இல்லாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய அரசு செய்த தவறினால் காட்டு பன்றிகளை கொல்ல அனுமதி இல்லை போன்ற வனவிலங்குகள் பிரச்சனையை தடுக்க முடியாமல் அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றோம். மாநில அரசு ஒன்றிய அரசிடம் பேசி இப்பிரச்சனைக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பட்ஜெட்டில் வனவிலங்குகள் பிரச்சனை தொடர்பாக தீர்வுகள் சொல்லப்படவில்லை,’’ என்றார்.

இதுகுறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறுகையில்,

‘‘ விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ் ஆப் குழு போன்ற அம்சங்கள் வரவேற்கதக்கது. பருத்திக்கு கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும். பருத்தி உற்பத்தியை பெருக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு என்பதற்கு பதிலாக கொள்முதல் விலையை மிகவும் அதிகரித்து தரவேண்டும். அப்போது தான் பருத்தி விவசாயிகள் அதிகரிப்பார்கள்,’’ என்றார்.

மேலும் படிக்க