April 16, 2019
தண்டோரா குழு
பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏப்.,18 அன்று தேர்தல் நடக்க உள்ளது. இதன் முடிவுகள் மே 23ல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டின் படி வேலூரில் அதிமுக-திமுக கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. அதிமுக சார்பில் ஏ.சி.ஷண்முகமும், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து இருகட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில், துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ.10.5 லட்சம் பணம் கைப்பற்றறப்பட்டது. இதனைத்தொடர்ந்து வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.11.53 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. எனினும் வருமான வரித்துறை இதனை மறுத்தது. இந்நிலையில், கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வேலூர் தொகுதிக்கான மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.