August 25, 2018
தண்டோரா குழு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.7 கோடி நிதியுதவி செய்வதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த வாரம் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 பேருக்கு மேலாக உயிரிழந்துள்ளனர்.பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர். இதனால் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.7 கோடி நிதியுதவி செய்வதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
கேரளாவில் ஏற்பட்ட பேரிடரை கண்டு எங்களது மனம் கலங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், மறு சீரமைப்புக்கு உதவும் வகையிலும், மெர்சி நிறுவனம் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு சேர்த்து ரூ.7 கோடி வழங்குகிறோம். எங்களது இணைய தளம், ஐ டியூன்ஸ், ஐ ஸ்டோரிலும் மக்கள் நன்கொடை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.