March 20, 2019 தண்டோரா குழு
கோடை காலத்தில் தேர்தல் நடைபெறுவதால் கடுமையான வெயிலில் பொதுகூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அரசியல் கட்சிகளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வலியுறித்தியுள்ளார்.
நாடு முழுவதும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த ஏப்ரல் காலகட்டத்தில் கோடை வெயில் சுட்டேரிக்கும் என்பதனால் கடுமையான வெயிலில் பொதுகூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தமிழக தேர்தல் அதிகாரி வலியுறித்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் ” கடுமையான கோடைக் காலத்தில் வெயில் அதிகமுள்ள நேரத்தில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களால் மக்கள் பல இன்னலுக்கு ஆளாவது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் கடும் வெயிலில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட ஒரு சிலர் கடுமையான வெப்பத்தின் காரணமாக உயிரிழந்தது குறித்தும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வேளையில் இவற்றினை கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் வெயில் நேரத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் கடுமையான வெப்பத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க போதுமான நிழல், குடிநீர், மருத்துவ வசதி போன்றவற்றை ஏற்படுத்துவதும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும்போது இந்த பரிந்துரைகளை கருத்தில் கொள்ளும்படி கடிதத்தில் குறிப்பிடபட்டுள்ளது.