February 16, 2019 தண்டோரா குழு
பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த சிவச்சந்திரன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் சென்ற வாகனங்கள் மீது வெடிமருந்து நிரப்பிய காரை பயங்கரவாதி ஒருவன் மோத
செய்தான். இந்த தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில், தமிழக வீரர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து, உயிரிழந்த தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவசந்திரன் உடல்கள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அப்போது அவர்களது உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் அன்பில் பொய்யாமொழி, செளந்தரராஜன் திருச்சி, அரியலூர் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
அங்கிருந்து சிவசந்திரனின் உடல் ராணுவ வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கபட்டது. அவரது பார்த்து பொதுமக்கள் கதறி அழுதனர். அவரது உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீரமரணமடைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் உடல் கார்குடியில் உள்ள அவரது தோட்டத்தில் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.