December 21, 2018
தண்டோரா குழு
விஷால் முறைகேடு செய்தார் என்றால் புகார் கொடுக்காமல் சங்கத்தை பூட்டுவீர்களா?: நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தி. நகரிலுள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக கூறி விஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டனர். இதையடுத்து, சங்க அலுவலகத்திற்கு சென்ற விஷால் பூட்டை உடைக்க முயன்றார். அப்போது போலீசாருக்கும் விஷால் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதற்கிடையில், நடிகர் விஷால் மீது பாண்டிபஜார் போலீசார் சட்ட விரோதமாக கூடுதல், தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர் மாலை விஷால் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை சட்டவிரோதமாக நடவடிக்கை எடுப்பதாக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.மேலும், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்ததற்கு விஷால் எதிர்ப்பு தெரிவித்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்திரவிட்டுள்ளது.
மேலும்,விஷால் மீது கைது நடவடிக்கை எடுத்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் 145 பிரிவை கையாண்டது எப்படி?இதில் போலீஸ் தலையிட என்ன முகாந்திரம் உள்ளது. எந்த இரு பிரிவுகள் மோதிக்கொண்டாலும் பிரிவு 145ஐ அமல்படுத்துவீர்களா? சங்க பிரச்னையை நீதிமன்றத்தை அணுகி அவர்கள் தீர்த்துக் கொள்ளட்டும், போலீஸ் ஏன் தலையிடுகிறது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தை பூட்டு போட யார் அதிகாரம் கொடுத்தது? விஷால் முறைகேடு செய்தார் என்றால் புகார் கொடுக்காமல் சங்கத்தை பூட்டுவீர்களா?ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட விஷாலின் பதவி காலம் இன்னும் முடிவடையாத நிலையில் அவரை சங்கத்திற்குள் அனுமதிக்காதது ஏன்? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது.
இந்த பிரச்சினைகளை நீதிமன்றம் மூலமாகவே தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.