October 6, 2020
தண்டோரா குழு
திருச்சியை சேர்ந்த வியாபாரியிடம் 21 டன் அரிசி வாங்கி மோசடி செய்த கோவை இளைஞரை போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் பீமாநகரை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் மகன் முகமது தமீமுன் அன்சாரி (39). இவர் திருச்சியில் உள்நாட்டு ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த அஷ்ரப் மற்றும் சலீம் என்ற இரண்டு பேர் இணையதளத்தில் அனுகி, இருவரும் போத்தனூர் பகுதியில் நடத்தி வரும் அரிசி மண்டிக்கு 21 டன் அரிசி வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்களது நிறுவனத்தின் ஜி.எஸ்.டி எண்ணையும் அனுப்பி வைத்ததால். இதை நம்பி முன் பணம் பெறாமல் சுமார் ரூ.9 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 21 டன் அரிசி மூட்டைகளை கோவைக்கு அனுப்பி வைத்துள்ளார். 21 டன் அரிசியை வாங்கிக்கொண்டு தொடர்ந்து பணம் தராமல் ஏமாற்றி வந்த நிலையில் மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன் அஷ்ரப்பை நேரில் சந்தித்து பணம் கேட்டுள்ளார், ஆனால் பணம் தராமல், பணம் கேட்டால் கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து முகமது தமீமுன் அன்சாரி போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இது வழக்கு பதிவுச் செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அஷ்ரப் ஏற்கனவே பல மோசடிகளில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த அஷ்ரப் (33) போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.