July 22, 2019
’கனவு திட்டம்’ சந்திரயான் 2 விண்கலம், GSLV மார்க் 3 ராக்கெட் மூலம் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் -1 விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அப்போது நிலவில் உள்ள சூழல்கள், கனிமங்கள் இருப்பதை கண்டறிந்தது. இதையடுத்து நிலவில் தரையிறங்கி தென் துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்து வந்தனர்.
சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த 15-ம் தேதி ஏவும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டு இருந்தது.ஆனால் ராக்கெட் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் கவுண்டவுன் திடீர் என நிறுத்தப்பட்டு சந்திரயான்-2 விண்கல பயணமும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கோளாறு சரிசெய்யப்பட்டு
சந்திரயான் 2 விண்கலத்தை ஏவ ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் 20 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 6.43-க்கு துவங்கியது. இதனையடுத்து சரியாக இன்று பிற்பகல் 2.43 மணிக்கு, சந்திரயான் விண்கலத்தை சுமந்து கொண்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
மேலும், விண்கலத்தின் பயண நாட்கள் 47 நாட்களாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ளது. விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி தன்னுடைய ஆய்வை மேற்கொள்ளும். இந்தியா உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த இந்த சந்திராயன்-2 விண்கலம் 640 டன் எடையுள்ளது. 44 மீட்டர் அல்லது 144 அடி உயரமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.